காணாமல் போயுள்ள தங்களது அன்புக்குரியவர்களை எண்ணி ஏங்கும் உறவுகளின் உணர்வுகளை பொறுப்புள்ள அரசாங்கம் ஒன்று மதித்துச் செயற்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
உங்கள் மகனையோ அல்லது உங்கள் கணவரையோ இழப்பது குறித்து கற்பனை செய்து பாருங்கள். அப்போதே தங்கள் உறவுகளுக்கு என்ன ஆனது? என எதுவுமே தெரியாவர்கள் அனுபவிக்கும் துயரம் உங்களுக்கும் தெரியும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
வட பகுதிக்கு வந்துள்ள அமெரிக்க தூதுவர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் தனது ருவிட்டரில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொறுப்புள்ள அரசாங்கம் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றும் கடமை உள்ளது எனவும் அவா் கூறியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் குறித்த தகவல்களை இலங்கை முழுவதும் உள்ள மக்கள் பலர் தொடர்ந்து தேடி வருகின்றனர். எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது? என்பதை அறிய அவர்கள் தகுதியானவர்கள் எனவும் தனது ருவிட்டரில் அமெரிக்க தூதுவர் அலைனா பி டேப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.